search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் கைது"

    • கோமளா திருமணம் செய்ய விருப்பம் இல்லை என தனது பெற்றோரிடம் தெரிவித்து வந்தார்.
    • ஆத்திரமடைந்த கோமளாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் இருவரும் சேர்ந்து கோமளாவை சரமாரியாக தாக்கினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கொட்டாங்காவை சேர்ந்தவர் கோமளா (வயது 17).

    கோமளாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். பெற்றோர் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையை கோமளாவுக்கு பிடிக்கவில்லை.

    இதனால் திருமணம் செய்ய விருப்பம் இல்லை என கோமளா தனது பெற்றோரிடம் தெரிவித்து வந்தார். பெற்றோரும் மகளை பல்வேறு விதங்களில் சமாதானம் செய்து வந்தனர்.

    நேற்று முன்தினம் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை கோமளா திருமணம் செய்ய முடியாது என பிடிவாதமாக தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த கோமளாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் இருவரும் சேர்ந்து கோமளாவை சரமாரியாக தாக்கினர். பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சரமாரியாக குத்தினர்.

    இதில் படுகாயம் அடைந்த கோமளா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கோமளாவின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கர்லடினே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோமளாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனந்தபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோமளாவின் தாயை கைது செய்தனர்.

    • பல இடங்களில் தேடிவிட்டு வீட்டில் இருந்த பால்கேனுக்குள் பார்த்தபோது குழந்தை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்துகிடந்தது.
    • சம்பவத்தன்று தாயை குளிர்பானம் வாங்க வீட்டைவிட்டு வெளியே அனுப்பிய சினேகா குழந்தையை பால் கேனுக்குள் திணித்து கொன்றுள்ளார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). கூலித்தொழிலாளி. இவருக்கும், கம்பத்தை சேர்ந்த சினேகா(19) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த சினோகவிற்கு வளைகாப்பு நடத்தி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    கடந்த மாதம் சினோகவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. கம்பம் கிராமச்சாவடி தெருவில் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். கடந்த 22-ந்தேதி பிறந்த குழந்தை வீட்டில் இருந்து திடீரென மாயமானது. பல இடங்களில் தேடிவிட்டு வீட்டில் இருந்த பால்கேனுக்குள் பார்த்தபோது குழந்தை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்துகிடந்தது.

    இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலில் சந்தேக மரணம் என்றும், பின்னர் கொலை வழக்காகவும் மாற்றி போலீசார் விசாரித்து வந்தனர். பிறந்து 25 நாட்களே ஆன ஆண் குழந்தை தண்ணீர் கேனுக்குள் மூழ்கடித்து கொலை செய்தது யார் என்று இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் தாய் சினேகா மற்றும் பாட்டியிடம் துருவிதுருவி விசாரித்தனர்.

    இதில் குழந்தையை கொன்றது தாய் சினேகா என உறுதியானது. சம்பவத்தன்று தாயை குளிர்பானம் வாங்க வீட்டைவிட்டு வெளியே அனுப்பிய சினேகா குழந்தையை பால் கேனுக்குள் திணித்து கொன்றுள்ளார். அதன்பிறகு சந்தேகம் வராத அளவுக்கு பாத்ரூமில் சென்று குளிப்பது போல சென்றுவிட்டார். பின்னர் குழந்தையை தேடுவது போல மற்றவர்களுடன் சேர்ந்து நாடகமாடி உள்ளார்.

    ஆனால் போலீசார் விசாரணையில் அவர் கொலை செய்தது உறுதியானது. எதற்காக ஆண் குழந்தையை கொலை செய்தார். இவருக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையையே கொலை செய்துவிட்டு தாய் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தையின் தலை பகுதி முழுவதுமாக சேற்றுக்குள் மூழ்கி இருந்தது.
    • சுமங்கலி தனது குழந்தையை சேற்றில் மூழ்கடித்து எதற்காக கொன்றார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் உப்பலா அருகே உள்ள பச்சிலம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சத்திய நாராயணன். இவரது மனைவி சுமங்கலி (வயது 33). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. சுமங்கலிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்த சுமங்கலியை திடீரென காணவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் தேடினர். அப்போது அங்கிருந்த நெல் வயலில் சுமங்கலி நின்று கொண்டிருந்தார். அவர்கள் அந்த வயலுக்கு சென்றனர். அப்போது சுமங்கலி தனது கைக்குழந்தையை வயலில் சேற்றுக்குள் அமுக்கியபடி நின்றார்.

    குழந்தையின் தலை பகுதி முழுவதுமாக சேற்றுக்குள் மூழ்கி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சுமங்கலியின் பிடியில் இருந்து குழந்தையை மீட்டனர். பின்பு மஞ்சேஷ்வர் தாலுகா மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சேற்றில் மூழ்கடித்து கைக்குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மஞ்சேஷ்வர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜீஷ் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை கொன்ற சுமங்கலியை கைது செய்தனர்.

    சுமங்கலி தனது குழந்தையை சேற்றில் மூழ்கடித்து எதற்காக கொன்றார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    ஆகவே குடும்ப தகராறு காரணமாக குழந்தையை சுமங்கலி கொன்றாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் கொன்றாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தையின் வாயில் நுரை தள்ளி இருந்ததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • சித்தப்பாவின் 2-வது மனைவி தேவலம்மா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் வடகேரா தாலுகா பபலா கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவரது முதல் மனைவி பெயர் ஸ்ரீதேவி. 11 ஆண்டுக்கு முன்பு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்திருந்தது. ஸ்ரீதேவியை திருமணம் செய்து 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. ஸ்ரீதேவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறி, கடந்த 7 ஆண்டுக்கு முன்பு தேவலம்மா என்பவரை சித்தப்பா 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக சித்தப்பாவுக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சித்தப்பாவுடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் ஸ்ரீதேவி பிரிந்து சென்று விட்டார். தன்னுடைய பெற்றோர் வீட்டில் அவர் வசித்து வந்தார். சித்தப்பா, தேவலம்மா தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்திருந்தது. 2 பேரும் பபலா கிராமத்தில் தங்களது குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சித்தப்பா மற்றும் ஸ்ரீதேவியை சமாதானப்படுத்தி, அவர்களது குடும்பத்தினர் மீண்டும் சேர்த்து வைத்திருந்தனர். இதையடுத்து ஒரே வீட்டில் சித்தப்பாவுடன் ஸ்ரீதேவி, தேவலம்மா, குழந்தைகள் வசித்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு (2022) ஸ்ரீதேவி கர்ப்பம் அடைந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பாக்கியம் இல்லை என்று கணவரை பிரிந்து சென்ற ஸ்ரீதேவிக்கு குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சியில் இருந்தார்.

    இந்த நிலையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந்தேதி ஸ்ரீதேவியின் 5 மாத குழந்தை திடீரென்று இறந்து விட்டது. குழந்தையின் வாயில் நுரை தள்ளி இருந்ததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து வடகேரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது குழந்தைக்கு வழங்கப்பட்ட பாலில் விஷத்தை கலந்து கொடுத்ததால், பச்சிளம் குழந்தை இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, வடகேரா போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது சித்தப்பாவின் 2-வது மனைவி தேவலம்மா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது தனது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 5 மாத குழந்தையை கொலை செய்ததை தேவலம்மா ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

    விசாரணையில், தனக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் இருப்பதாலும், தற்போது ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் கணவர் சித்தப்பாவின் சொத்தில் அந்த பெண் குழந்தைக்கு பங்கு கொடுக்க வேண்டும். இதனால் தனக்கும், தன்னுடைய குழந்தைகளுக்கான சொத்து பறிபோகும் என்பதால் 5 மாத குழந்தைக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    விசாரணைக்கு பின்பு தேவலம்மா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சொத்து பறிபோகும் என்பதால் கணவரின் முதல் மனைவியின் 5 மாத குழந்தையை, 4 பிள்ளைகளின் தாய் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • குழந்தை திருமணத்திற்கு சிறுமியின் தாய் முத்துலட்சுமி உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
    • குழந்தை திருமணத்தால் பெண்களின் கல்வி பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் சூழல் உருவாகிறது.

    வேப்பந்தட்டை:

    இந்தியாவில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆண்களின் திருமண வயது 21 ஆகவும், பெண்களின் திருமண வயது 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் குழந்தை திருமணங்கள் தொடர்கதையாக இருக்கிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 16 வயது மகளை 35 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் காளி. கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 40). இந்த தம்பதியரின் 16 வயது சிறுமிக்கு சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த சக்திவேல் (35) என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர் எறையூர் சர்க்கரை ஆலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த ஜூன் மாதம் 13ந் தேதி உற்றார் உறவினர்கள் புடை சூழ தடபுடலாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த குழந்தை திருமணம் குறித்து மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் விரைந்து சென்று சிறுமியின் பெற்றோரை தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

    இதில் குழந்தை திருமணத்திற்கு சிறுமியின் தாய் முத்துலட்சுமி உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனை மோப்பம் பிடித்துக்கொண்டு சக்திவேல் சிறுமியுடன் வெளி மாநிலத்துக்கு தப்பி ஓடிவிட்டார். அதைத் தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள சிறுமியையும் அவரது கணவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    குழந்தை திருமணத்தால் பெண்களின் கல்வி பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் சூழல் உருவாகிறது. இதனால் குடும்பத்தில் வறுமை சூழும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாலின சமமின்மை காரணத்தால் தாம்பத்திய வாழ்க்கையும் சிறிது காலத்திலேயே கசந்து போகிறது. மேலும் குழந்தை திருமணத்தால் சிறுமிகளுக்கு பிரசவத்தின்போது உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. ஆகவே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

    • தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வரும் ஜீவிதா குழந்தை இல்லாமல் தவித்து வந்த நிலையில் கர்ப்பமானார்.
    • அண்ணன்களான தன பாண்டி, சண்முக பாண்டி இருவரும் குழந்தையை மோட்டார்சைக்கிளிலேயே தூக்கிக் கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சல்லக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி ஜீவிதா இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வரும் ஜீவிதா குழந்தை இல்லாமல் தவித்து வந்த நிலையில் கர்ப்பமானார். அதன் பின்னர் சல்லக்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்த ஜீவிதாவுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    கடந்த 2 வாரங்களாக கணவர் சிவராஜ் குழந்தையை பார்க்க வராமல் இருந்துள்ளார். அதே நேரத்தில் குழந்தைக்கு கழுத்து பகுதியில் வேனல் கட்டிகள் இருந்து வந்ததால் தொடர்ந்து குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. ஜீவிதாவிடம் குழந்தை தாய்ப்பால் குடிக்காமலும் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவிதா தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்தை அறுத்தார்.

    இதில் வலி தாங்க முடியாமல் குழந்தை துடித்தது. தொட்டிலில் படுத்திருந்த நிலையிலேயே குழந்தையின் கழுத்தை வெட்டியதால் தொட்டில் வேட்டியும் ரத்தமானது. ஆனால் ஜீவிதாவோ, இதனை மறைத்து குழந்தையின் கழுத்தில் இருந்து திடீரென ரத்தம் பீறிட்டு வருவதாக கூறி உள்ளார்.

    இதையடுத்து அவரது அண்ணன்களான தன பாண்டி, சண்முக பாண்டி இருவரும் குழந்தையை மோட்டார்சைக்கிளிலேயே தூக்கிக் கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

    இதுபற்றி வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் கழுத்தில் இருந்து கட்டி பெரிதாகி அதன் மூலமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஜீவிதா முதலில் தெரிவித்தார். ஆனால் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் ஜீவிதா குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இது தொடர்பாக தாய் ஜீவிதா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    8 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்த நிலையிலும் 2 வாரங்களாக கணவர் பார்க்க வரவில்லை. குழந்தையும் தாய்ப்பால் குடிக்காமல் இருந்தது. இதனால் புட்டிப்பால் மட்டுமே கொடுத்து வந்தேன். இதன் காரணமாக எனக்கு மன அழுத்தம் அதிகமானது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த நான் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

    இவ்வாறு ஜீவிதா பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    • முதல் கணவருக்கு 2 குழந்தைகள் பிறந்தவுடன் இளம்பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
    • இளம்பெண்ணின் மூத்த மகள் மீண்டும் 3 மாத கர்ப்பம் ஆனார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டம் வட்லூரை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இளம்பெண்ணின் கணவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2007-ல் இறந்தார்.

    கணவர் இறந்த பிறகு தனது தாய் மாமன் சதீஷ்குமார் (வயது 43) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பிறகு தனது 2 மகள்களையும் சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளியில் சேர்த்து அங்கேயே தங்க வைத்தார்.

    முதல் கணவருக்கு 2 குழந்தைகள் பிறந்தவுடன் இளம்பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

    2-வது திருமணம் செய்து கொண்ட சதீஷ்குமார் சில மாதங்களுக்கு பிறகு தனக்கு குழந்தை பெற்று தர வேண்டும். இல்லையென்றால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வேன் என அடம்பிடித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு பதிலாக என்னுடைய மகள் மூலம் குழந்தை பெற்றுக்கொள் என கூறினார்.

    இதையடுத்து விசாகப்பட்டினத்திற்கு வந்த இளம்பெண் அங்கு 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தனது மூத்த மகளை 2-வது கணவரிடம் ஒப்படைத்தார். சிறுமியின் கடும் எதிர்ப்பையும் மீறி சதீஷ்குமார் பலாத்காரம் செய்தார்.

    இதனால் சிறுமி கர்ப்பமானார். சிறுமி கர்ப்பமான விஷயம் வெளியே தெரிந்தால் அவதூறாக பேசுவார்கள் என கூறி டாக்டரிடம் அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர்.

    ஆனால் மீண்டும் சிறுமி கர்ப்பமாகி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது சதீஷ்குமார் தனக்கு பெண் குழந்தை தேவையில்லை. ஆண் குழந்தை தான் வேண்டும் என அடம் பிடித்தார்.

    இதையடுத்து விசாகப்பட்டினம் சென்ற இளம்பெண் தனது 2-வது மகளை அழைத்து வந்தார். அவரையும் சதீஷ்குமார் பலாத்காரம் செய்தார். இதனால் கர்ப்பமான சிறுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் கருவிலேயே இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இறந்த நிலையில் பிறந்த குழந்தையை தூக்கிச் சென்று கால்வாயில் வீசி விட்டனர்.

    இதனால் இளம்பெண்ணிற்கும் சதீஷ் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தனது 2 மகள்களையும் சதீஷ்குமாரிடம் விட்டு விட்டு இளம்பெண் விசாகப்பட்டினத்திற்கு சென்று அங்குள்ள போலீசில் புகார் செய்தார். போலீசார் சதீஷ்குமார் மற்றும் சிறுமிகளை அழைத்து கவுன்சிலிங் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணின் மூத்த மகள் மீண்டும் 3 மாத கர்ப்பம் ஆனார். இது குறித்த தகவல் அறிந்த இளம்பெண் ஏலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் அவருக்கு துணையாக இருந்த சிறுமியின் தாய் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    சிறுவயதிலேயே குழந்தை பெற்ற சிறுமிகள் தவித்து வருகின்றனர்.

    • 11 வயது சிறுமி பள்ளி வகுப்பறையில் சோகத்துடன் காணப்பட்டார்
    • போலீசார் விசாரணை நடத்தி சிறுமியின் தாயாரை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பள்ளி வகுப்பறையில் சோகத்துடன் காணப்பட்டார். ஆசிரியைகள் அவருக்கு கவுன்சிலிங் வழங்கியபோது தனக்கு தாயாரின் நண்பர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி சிறுமியின் தாயாரை கைது செய்தனர்.

    சிறுமிக்கு நடந்த பாலியல் தொல்லையை தடுக்க தவறியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார்.
    • ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆலூரைச் சேர்ந்தவர் சக்தி (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கட்டிட பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார். இவரது மனைவி நந்தினி (25).

    இவர்களுக்கு பிரவீன் (6), ஜெகநாதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் பிரவீனை ஓசூர் அருகே உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நந்தினி சேர்த்து விட்டு குழந்தை ஜெகநாதனுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் குழந்தை ஜெகநாதன் கடந்த மாதம் விளையாடி கொண்டிருந்த போது வீட்டு மாடி படியில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக நந்தினி கூறினார். ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை டிஸ்சார்ஜ் ஆன நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி காலை இறந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தனது பேரன் சாவில் சந்தேகம் உள்ளதாக நந்தினியின் தாயார் வள்ளி அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நந்தினியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலன் தனது மகனை கொன்றதை நந்தினி ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து நந்தினியின் கள்ளக்காதலனான ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    கணவர் இறந்த பிறகு நந்தினி 2 குழந்தைகளுடன் ஓசூர் தேர்பேட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவளுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நான் அடிக்கடி நந்தினியுடன் உல்லாசமாக இருந்து வந்தேன். கடந்த மாதம் 6-ந் தேதி நந்தினி வீட்டிற்கு சென்று அவளுடன் உல்லாசமாக இருந்தேன்.

    குழந்தை எங்களின் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்தது. அதனால் ஆத்திரத்தில் நான் பீர்பாட்டிலால் குழந்தையின் தலையில் தாக்கினேன். இதில் குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் ஒரு நாள் கழித்து குழந்தையை ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நந்தினி சேர்த்தாள். அங்கு குழந்தை படியில் இருந்து விழுந்ததில் காயம் அடைந்ததாக கூறி நாடகமாடினார். பின்னர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை 22-ந் தேதி டிஸ்சார்ஜ் ஆனது. அங்கிருந்து வீட்டிற்கு வந்த குழந்தை கடந்த 25-ந் தேதி காலை திடீரென இறந்து விட்டது. பின்னர் உடலை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் நாங்கள் 2 பேரும் புதைத்து விட்டோம். நந்தினியின் தாய் கொடுத்த புகாரால் நான் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    • தாசில்தார் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரேணுகா, ரேவதியை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    நீடாமங்கலம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்தவர் முத்து. இவருக்கும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா வேடம்பூர் கிராமத்தை சேர்ந்த ரேணுகா எண்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதனால் ரேணுகா தனது 3 பிள்ளைகளுடன் வேடம்பூரில் உள்ள வீட்டில் தாய்- தந்தையுடன் வசித்து வந்தார். அவர் அங்கிருந்து குடவாசலில் உள்ள ஜவுளிக்கடையில் வேலைக்கு சென்றார். அப்போது அதே கடையில் வேலைபார்க்கும் கமலேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

    இது கள்ளக்காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகினர். இதில் ரேணுகா கர்ப்பம் அடைந்து கடந்த 22-ந்தேதி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் பச்சிளம் குழந்தையை ரேணுகா, அவரது தாயார் ரேவதி ஆகியோர் சேர்ந்து வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் புதைத்துள்ளதாக வலங்கைமான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு ரேணுகா, ரேவதி இல்லாதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களை தேடி வந்தனர்.

    இதற்கிடையே தாசில்தார் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரேணுகா, ரேவதியை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

    ரேணுகா கணவரை விட்டு பிரிந்த நிலையில் தன்னுடன் வேலைப்பார்த்த கமலேஷ் என்பவருடன் பழகி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் தகாத உறவில் குழந்தை பிறந்ததால் ஊரில் உள்ளவர்கள் அவமானப்படுத்துவார்களே என எண்ணினார். இது குறித்து தாய் ரேவதியிடம் கூறியுள்ளார்.

    பின்னர் அவர்கள் பச்சிளம் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் பஸ்சில் ஊருக்கு வந்துள்ளனர். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கட்டைபையில் குழந்தையை போட்டனர். அங்குள்ள ஒரு பாலத்தின் பக்கவாட்டு சுவரில் ஈவு இரக்கமின்றி குழந்தையை தூக்கி ஓங்கி அடித்தனர். இதில் அந்த பச்சிளங் குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இதையடுத்து வீட்டின் பின்புறம் இருவரும் சேர்ந்து புதைத்தனர். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் இருவரும் உண்மையை கூறியதும் தெரியவந்தது.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×